(இராஜதுரை ஹஷான்)
ஆசிரியர், அதிபர்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள். பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்காமல் ஆசிரியர்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் நிந்திப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆசிரியர், அதிபர்கள் பாரிய ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து உதாசீனப்படுத்தவது கவலைக்குரியது.
ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதாகவே குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை.
மாறாக உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களும், அதிபர்களும் படுமோசமானவர்கள் என்றும், கீழ்த்தரமான சொற்பிரயோகங்களினாலும் அரசாங்கத்தினால் நிந்திக்கப்பட்டுள்ளார்கள். ஆளும் தரப்பினரது செயற்பாடுகள் வன்மையான கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர், அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஆசிரியர்கள் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என குறிப்பிடவில்லை. நிலுவையில் உள்ள தொகையினை வழங்க வேண்டும் அத்துடன் வரவு செலவு திட்டத்தின் ஊடாக சம்பளம் எவ்விதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றே குறிப்பிடுகிறார்கள். இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment