மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ‘பொட்ட நௌபர்’ என அழைக்கப்படும் மொஹமட் நியாஸ் நௌபர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பூஸா சிறைச்சாலையில் சிறையிலிருந்த குறிந்த நபர், கடந்த வாரம், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் இன்று (28) மரணமடைந்ததாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும் (நிர்வாகம்), ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் பிரதான பொலிஸ் பரிசோதகர் R.A. உபாலி ஆகிய இருவரையும் நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக வைத்து சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில், நௌபர் உள்ளிட்ட ஐவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2005 ஜூலை 04ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுஜித் ரோஹண ரூபசிங்க, சுமிந்த நிஷாந்த, உதார பெரேரா, லசந்த குமார ஆகியோரே இவ்வழக்கின் ஏனைய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment