தகாத உறவினால் வந்த வினை : தாய், மகன் கொலை - கொலையாளியும் தற்கொலை - பக்கத்துக்கு வீட்டுக்கு தப்பியோடிய 5 வயது சிறுவன் உயிர் பிழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

தகாத உறவினால் வந்த வினை : தாய், மகன் கொலை - கொலையாளியும் தற்கொலை - பக்கத்துக்கு வீட்டுக்கு தப்பியோடிய 5 வயது சிறுவன் உயிர் பிழைப்பு

கல்கமுவ, மஹனான்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் குறித்த வீட்டில் வசிக்கும் தாய் (28) அவரது மகன் (10) மற்றும் அப்பிரதேசத்தில் வசிக்கும் ஆண் (28) ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீட்டை சோதனையிட்ட போது குறித்த மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றிரவு (06) குறித்த வீட்டில் இடம்பெற்ற சச்சரவொன்றை அடுத்து, குறித்த 28 வயது நபர், குறித்த பெண்ணையும், அவரது மகனையும் கொன்ற பின் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த பெண்ணுடன் தகாத தொடர்பை பேணிய நபரே இவ்வாறு இக்கொலையை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டிலிருந்த 5 வயது சிறுவன் குறித்த வீட்டிலிருந்து, அருகிலுள்ள வீட்டுக்கு தப்பியோடி உயிர் பிழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவன் ஓடோடி வந்து "எனது தாய் இல்லை" என பக்கத்து வீட்டாரிடம் சொல்லியுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு அவர்கள் அழைப்பை மேற்கொண்ட போது அப்பெண் தொலைபேசியை எடுக்காத நிலையில், குறித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது இவ்வாறு மூன்று சடலங்கள் காணப்பட்டதாக அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர், கடற்படையில் பணிபுரிபவர் எனவும், குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் அங்கு இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment