(எம்.மனோசித்ரா)
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வாக செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும் என்று தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு சுபோதினி அறிக்கையூடாக தீர்வு வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும், தற்போது அமைச்சரவை உப குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுபோதினி அறிக்கையூடாக தரம் 1 நிலை ஆசிரியர்களுக்கு 31,000 ரூபா சம்பள அதிகரிப்பும், ஆரம்ப மட்டத்திலுள்ளவர்களுக்கு குறைந்தது 10,000 ரூபாவேனும் அதிகரிக்கப்படவிருந்தது. எனினும் தற்போது அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளுக்கமைய சம்பள அதிகரிப்பானது கட்டம் கட்டமாக வழங்கப்படுமாயின் அது மிகக் குறைந்தளவானதாகவே காணப்படும்.
இதேவேளை 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவையும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மாத்திரமே வழங்கவுள்ளனர். அதன் பின்னரும் அதாவது எதிர்வரும் ஜனவரி மாதமளவிலேனும் இந்த இடைக்கால கொடுப்பனவை நீடித்து, பின்னர் அதனை நீக்கி 2000 அதிகரிப்பை மாத்திரம் வழங்குவார்களாயின் அது பிரயோசனமானதாக இருக்காது.
இது ஒரு கண் துடைப்பாகும் என்பது சகல தொழிற்சங்கங்களினதும் நிலைப்பாடாகவுள்ளது. எனவே இதற்கு பொறுத்தமான தீர்வொன்று வழங்கப்பட்டால் மாத்திரமே மாணவர்களின் கல்வி பாதிப்படையாமலிருக்கும் என்றார்.
No comments:
Post a Comment