இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான், சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு துறையின் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர். எம். வீரப்பன் அவர்களை சந்தித்தார்.
இதன்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த இடமான கண்டியில் அவருக்கு நினைவிடம் ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
இதன்போது இலங்கையில் தமிழ் வழியிலான கல்வியை மலையகப் பகுதியில் மேம்படுத்த வேண்டும் என்றும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமானிடம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதனிடையே தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்காக, அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காகவே ஜீவன் தொண்டமான் சென்னைக்கு வருகை தந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஒன்றும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment