அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் உதவியுடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் இன்று கிடைக்கப் பெற்றன.
ஏற்கனவே இலங்கையில் அஸ்ட்ரா செனிகாவை முதல் கட்ட தடுப்பூசியாகப் பெற்று இரண்டாம் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில் அவ்வாறு 2 ஆம் கட்ட தடுப்பூசிகள் பெறுவோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், எஞ்சியவை கேகாலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதன்படி நாளை முதல் கொழும்பில் 18 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 8 வைத்தியசாலைகளிலும், 13 தெரிவு செய்யப்பட்ட இடங்களிலும் அஸ்ட்ரா செனிகா 2ஆம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
அதேபோன்று, களுத்துறையில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும், கம்பஹாவில் 15 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் 2ஆம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை அஸ்ட்ரா செனிகா இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தடுப்பூசி அட்டையையும் உடன்கொண்டு வருமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment