(நா.தனுஜா)
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை மனிதாபிமான அடிப்படையில் மறுபரீசிலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பலருக்காக இரங்கியிருக்கும் ஜனாதிபதியின் உள்ளம் ரஞ்சன் ராமநாயக்கவிற்காகவும் இரங்கும் என்று நம்புகின்றோம் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் கிடைக்கப் பெறும் அறிக்கைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நோக்குகையில் நாடு மிகவும் வேகமாக அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.
வெளிநாட்டுக் கையிருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்துவதற்காக சில மாதங்களுக்குள் பெருமளவான நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளமை, இறக்குமதி நடவடிக்கைகளின்போது கடன் பத்திரமொன்றை விநியோகிக்க வேண்டிய தேவையுள்ளமை ஆகியவை விசேடமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.
அதுமாத்திரமன்றி நாட்டில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தரப்பினர் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி எமது நாட்டில் வாழும் மாணவர்களுக்கும் கல்வியைப் பெறுவதற்கான உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டின் பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டு, பாடசாலைக் கல்வி சீர்குலைந்திருக்கிறது. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. அவர்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான மாற்றுத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய தரப்பினர் தவறியிருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் அதற்கு அவசியமான கட்டணங்களை இங்கிருந்து அந்நாடுகளுக்குச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்தளவிற்கு நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது.
உண்மை நிலைவரம் இவ்வாறிருக்கையில், அரசியல்வாதிகள் தாம் வேறு உலகத்தில் இருப்பதுபோன்று பொய்யான கதைகளை சோடித்துக்கூறி, பொதுமக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனால் இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு அவசியமான முறையான செயற்திட்டங்களை வகுப்பது குறித்து அவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
இந்நிலை தொடர்பில் நாம் பெரிதும் வருந்துகின்றோம். இவை குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் மற்றும் தமது எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
அதுமாத்திரமன்றி நாட்டு மக்களும் உண்மை நிலைவரம் குறித்து போதியளவு அவதானத்துடன் செயற்பட வேண்டும். இன்றளவில் எமது நாடு பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
அரசியல்வாதிகள் செயற்படும் விதத்தைப் பார்க்கும்போது அது நன்கு புலனாகின்றது. அவர்கள் நாட்டு மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
அதுமாத்திரமன்றி ஆளுந்தரப்பில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும் எதிர்த்தரப்பில் இருப்பவர்களுக்கு மற்றொரு சட்டமுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாகவே ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் நாம் விசேடமாக அவதானம் செலுத்துகின்றோம். ரஞ்சன் ராமநாயக்க என்பவர் தெற்காசியாவில் பிரபலமான நடிகராவார். நாமறிந்தவரையில் அவர் சுமார் 100 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
நாட்டில் இடம்பெறும் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் அவர் தொடர்புபடவில்லை. அதேபோன்று அவர் எவ்வித குற்றத்தையும் இழைக்கவில்லை. நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இதுவரையான காலத்தில் அவர் போதியளவு தண்டனையை அனுபவித்து விட்டார். அவ்வாறிருக்கையில் அவருக்கான தண்டனை இந்தளவிற்கு பாரதூரமானதாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி சமூகத்தில் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஏனைய நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளையும், குறிப்பாக இவ்விடயத்தில் அண்மையில் இந்தியாவில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சமுதாயத்தில் இதுபற்றிய தர்க்கமொன்று எழுவது மிகவும் ஆரோக்கியமான விடயமென்றே நாம் கருதுகின்றோம்.
எது எவ்வாறெனினும் நாமறிந்த தகவல்களின்படி சிறையில் காலத்தைக் கழிக்கும் ரஞ்சன் ராமநாயக்க உடலியல் ரீதியில் ஆரோக்கியத்துடன் இல்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து, அதனை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். இது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.
பலருக்காக இரங்கியிருக்கும் ஜனாதிபதியின் உள்ளம் ரஞ்சன் ராமநாயக்கவிற்காகவும் இரங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். ஆகவே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கல் அதிகாரத்தின் கீழ் அனைத்து சட்ட அடிப்படைகளையும் பின்பற்றி, இவ்விடயம் தொடர்பில் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் விளைவிக்கப்படக் கூடிய அநீதி தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.
அரசியல் பழிவாங்கல்களுக்கு அனுசரணை வழங்கியதாகக் குறிப்பிட்டு அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டின் சட்டத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட பல வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அப்பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி எதிர்த்தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சட்டதிட்டங்களை உரியவாறு பின்பற்றுகின்ற ஒழுக்கமான எந்தவொரு நாட்டிலும் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாது.
சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் முரணான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் இவ்விடயத்தில் நாட்டின் பாராளுமன்றம் அதன் கடமையை சரியாக நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை. இதில் பொறுப்புக்கூற வேண்டிய பிரதமரேனும் இவ்விடயத்தில் தலையிட்டு, பாராளுமன்றத்தின் ஊடாக இந்த முறையற்ற நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்.
மேலும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பொதுஜன பெரமுனவை இயக்கும் நபர்களும் உள்ளடங்குகின்றார்கள். அதேபோன்று அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் உள்ளடங்குகின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயம் என்பதனால், ஜனாதிபதி இது குறித்து அவதானம் செலுத்தி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment