(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை என்பது உண்மையே, ஆனால் இந்த அரசாங்கத்தில் வீடுகளுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்து தூக்கிச் செல்லும் சம்பவங்களே இடம்பெறுகின்றது என முன்னாள் நீதி அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல்அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல்நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும்காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும்கொடுப்பனவுகளை அதிக ரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேளையில், பிரபாகரனை சுட்டுக் கொன்று நாயைப்போல் இழுத்து வந்தது நினைவில் உள்ளதா என ஜனாதிபதி கேட்டார். இப்போது பிரபாகரனுக்கு நடந்ததுபோல் தான் நடக்குமென மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடகவியலாளர் ஒருவரை பகிரங்கமாக மிரட்டுகின்றார். நாடு எங்கே செல்கின்றது.
வெள்ளை வேன் பற்றி பேசுகின்றனர், இதற்கு முன்னர் ஊடகவியாளர்களுக்கு நடந்தது மீண்டும் இடம்பெறப்போகின்றதா என கேள்வி எழுகின்றது. இவர்களின் கடந்த ஆட்சியில் கொலை மிரட்டல்களினால் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் .அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.
காணாமால் போனோர் குறித்த காரியாலயம் அவசியமான ஒன்றாகும், இவர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்து நாம் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டோம். ஆனால் இந்த காரியாலய தலைவர் சாலிய பீரிஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு போட்டியிட்ட வேளையில் இந்த ஆட்சியில் சிலர் அவரை அவமதித்தனர். வடக்கு கிழக்கில் மக்களை மாத்திரம் இலக்கு வைத்து இந்த காரியாலம் உருவாக்கப்படவில்லை. 1983ஆம் ஆண்டில் இருந்து தேடுவதற்கு இந்த காரியாலயம் உருவாக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment