புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் - தயாசிறி ஜெயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் - தயாசிறி ஜெயசேகர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாகவும், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த அரசாங்கம் தலையிட்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல்நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும்காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும்கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாக நாம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். சர்வதேச ரீதியிலும் நாட்டுக்கு எதிராகவும், அரசாங்கதிற்கு எதிராகவும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது. எமது கொள்கை, பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு எதிராக பல நாடுகள் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவுடன் நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக பல்வேறு நாடுகள் எம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இது வெவ்வேறு நாடுகள் ஒன்றிணைந்து எமக்கு எதிராக செய்யும் வேலைத்திட்டமாகும். ஆனால் இதற்காக நாம் எந்த நாட்டுடனும் முரண்படாது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நோக்கங்களை விளங்கிக் கொண்டு நாடாக முன்னோக்கி செல்ல வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு கூறும் விடயங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இந்த காரணிகளை கையில் எடுத்துக் கொண்டு அதில் அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர், பின்னர் எமக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தாது உள்ளோம் என்றே நினைக்கின்றேன். 

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதில் தமிழ் மக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டது, 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் சர்வதேச புலம்பெயர் அமைப்புகள் பிரசாரம் செய்துகொண்டுள்ளது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே அடித்தளம் போட்டு வருகின்றது. கூட்டமைப்பினர் இங்கு பேசுவதை கொண்டே பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூன்று இலட்சம் மக்கள் நெருக்கடி நிலையில் இருந்து இராணுவத்தினால் காப்பற்றப்பட்டனர். இந்த மூன்று இலட்சம் மக்களையும் கொன்று குவித்திருந்தால் இவர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இராணுவம் இவர்களை காப்பாற்றியது. 

இப்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் என அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த பரம்பரை தமிழ் மக்கள் இலங்கையில் அடக்குமுறை இடம்பெறுவதாக நினைப்பார்கள். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். 

தமிழ் அமைப்புகளின் இந்த செயற்பாடுகள் காரணமாக அங்கு வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையே உருவாகியுள்ளது. இது கனடாவில் மட்டுமல்ல, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இருக்கும் சகல இடங்களிலும் இவ்வாறான செயற்படுகள் இடம்பெற்றால் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகும். எனவே இதனை நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எம்மை நெருக்கடிக்குள் தள்ளி, அவர்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஆட்சி முறை ஒன்றினை உருவாக்கிக் கொள்ளும் வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் நாடாக சுயாதீனமாக பயணிக்க முடியாது போகின்றது. மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இலங்கையர் நாட்டை விட்டு வெளியில் சென்றால் கைது செய்ய முடியும். இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளது. 

ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் குறித்து நாம் இப்போது பேசிக் கொண்டுள்ளோம். முன்னைய ஆட்சியிலும் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் அது நாட்டின் நலனுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment