(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.
அத்துடன் நாளையதினமே அவர் பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று புதன்கிழமை வெளியிட்டது.
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கமைய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாளை காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதுடன், அன்றைய தினமே பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையிலும், அமைச்சுக்களின் விடயதானங்களிலும் பெரும்பாலும் மாற்றம் ஏற்படும் என அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை அரசியல் மட்டத்தில் பிரதானமாக ஆளும் தரப்பின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் கூட்டணியினர் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment