நூருள் ஹுதா உமர் & சர்ஜுன் லாபீர்
மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்று வியாழக்கிழமை (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு அங்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென நேற்று இடம்பெற்ற சுகாதாரத் துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, நேற்றும், இன்றும் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் முடிவுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அதில் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படாமையை கவனத்தில் கொண்டு முடக்கத்தை சுகாதார நிபந்தனைகளுடன் தற்காலியமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணியளவில் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இம்முடிவுகள் பெறப்பட்டது.
சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின் பேரில் மேற்படி கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் கடுமையாக ஆராயப்பட்டு பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் மாலை 06.00 மணிக்கு மூடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டு இந்த பயணத் தடை வாபஸ் பெறப்பட்டுள்ளதுடன், சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படும்.
இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்தலி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரி, கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, மருதமுனை உலமா சபையினர், மருதமுனை வர்த்தக சங்க பிரதிநிதியினர், பொலிஸார், இராணுவத்தினர், மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அமீர், எம்.எஸ். உமர் அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment