ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது : பல்கலைக்கழக ஊழியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது : பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

(நா.தனுஜா)

பெருந்தொற்றுக்கால சுகாதார நடைமுறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

ஆசிரியர் ஸ்டாலின் உட்பட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அத்துமீறல்களைக் கண்டனம் செய்யும் வகையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறி சம்பந்தப்பட்டோர், எதுவென அறிவிக்கப்படாத கொரோனா தனிமைப்படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த நிலையில், கல்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழிற்சங்கம் என்ற வகையிலும் நியாயத்திற்காக பாடுபடுகின்ற ஒரு அமைப்பு என்ற ரீதியிலும் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது போராட்ட சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.

இலங்கை ஆசிரியர் சங்கமானது எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் தோழமை உறவுபூண்டு, தொழிற்சங்க மற்றும் மனித உரிமை பொதுத்தளங்களில் மே தினம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் எமது சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதோடு, எமது சங்க அங்கத்தினர் மீதான உள்ளக விசாரணைகளுக்கு அவர்களின் சார்பில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்னிலையாகி உதவியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை என்பது உண்மையெனினும், பெருந்தொற்றுக்கால சுகாதார நடைமுறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்படுகளையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் போராட்டக்காரர்கள் மீதான நியாயமற்ற அத்துமீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் நியாயபூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment