சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்களாக” அபிவிருத்தி செய்யும் நிகழ்வு நேற்று (01) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய நுவரெலியா மந்தாரம்நுவர போஞ்சி விதை மற்றும் கோப்பி உற்பத்தி கிராமம், பேராதனை உடுஈரியகொல்ல மலர் உற்பத்தி கிராமம் மற்றும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரான்பட்டிருப்பு நல்லெண்ணெய் உற்பத்தி கிராமம் என்பன “சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” என பெயரிடப்பட்டு அதற்கான டிஜிட்டல் நினைவு பலகைகள் பிரதமரின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
குருநாகல் கனேவத்த கும்புக்கெடே கிராமம் மற்றும் கம்பஹா மீரிகம கீனதெனிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட “சௌபாக்கியா செனஹசே நவாதென” வீடு இந்நிகழ்வின்போது அவ்வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
மக்களுக்கு செயற்திறனான மற்றும் துரித சேவையை வழங்குவதற்கு சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு 01 முதல் எதிர்வரும் 07ம் திகதி வரை “சௌபாக்கியா - சமுர்த்தி வாரம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“சௌபாக்கியா உற்பத்தி கிராமம்” ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, “நமது நாட்டின் சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறான உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் இம்மக்களுக்காக ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எவ்வாறு பொறுப்பை நிறைவேற்றுவது என்பது குறித்து சிந்தித்தோம்.
கொடுப்பனவுகளை வழங்கி இம்மக்களை ஒரே இடத்தில் இருப்பதை மாற்ற வேண்டும் என நாம் விரும்பினோம். சௌபாக்கிய சமுர்த்தி வாரம் அதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி திட்டத்திற்கு தற்போது 27 ஆண்டுகளாகின்றன. வறுமை கோட்டிலுள்ள மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கிலேயே சமுர்த்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அன்று நாம் எதிர்பார்த்த பலன் எமக்கு கிடைத்துள்ளதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சமுர்த்தி திட்டத்தின் ஊடாக அன்று கொடுப்பனவுகளை பெற்றவர்கள் இன்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டு இருப்பார்களாயின் நமது எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதே அதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் யாரும் செல்வந்தராக முடியாது. அவர்களுக்கு சரியான வருமான மார்க்கத்தை உருவாக்கிக் கொடுத்து உரிய முறையில் வழிகாட்ட வேண்டும். அதனை உணர்ந்து அன்று நாம் மஹிந்த சிந்தனை ஊடாக சமுர்த்தி திட்டத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.
சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் தொழிற்பயிற்சி திட்டங்களுக்கு வழிநடத்தி திறமையான பணியாளர்களாக உருவாக்கினோம். அதன் மூலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்க எம்மால் முடிந்தது என்று நாம் நம்புகின்றோம்.
அதுமாத்திரமன்றி அவர்களை அரச மற்றும் தனியார் துறையில் மாத்திரம் அல்லாமல் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பில் ஈடுபடுத்த முடிந்தது. அதன் மூலம் பலரை நன்கொடை மற்றும் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து மீட்க முடிந்தது.
சுபீட்சத்தின் நோக்கில் செயற்திறனான குடிமகன் போன்றே மகிழ்ச்சியாக வாழும் குடும்பம் எனும் எண்ணக்கருவை முன்னோக்கி நகர்த்தியுள்ளோம். இதனூடாக முழுமையான வதிவிட பொருளாதாரத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்திலும் அம்மக்களை வளப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
ஆனால் கடந்த அரசாங்கத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் திரும்பிக்கூடப் பார்க்கப்படவில்லை. அனைத்தும் அவர்களது கட்சியினருக்கு மாத்திரமே என இப்பாரிய திட்டம் மிகவும் குறுகிய இடத்தில் குவிந்திருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
மக்களை மேம்படுத்தாது அவர்களை அவ்விடத்திலேயே முடங்கச் செய்து அரசியல் இலாபம் தேடுவதே அவர்களது அரசியல் தந்திரோபாயமாக காணப்பட்டது. நாம் ஒருபோதும் அவ்வாறானதொரு நிலைக்கு தள்ளப்படவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சமுர்த்திக்காக நாம் ஆண்டிற்கு 50 ஆயிரம் மில்லியன் ரூபாயை செலவிடுகிறோம். சமுர்த்தி பயனாளர் குடும்பங்களை பொருhளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் இதுவரை பல புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம்.
அதற்கமைய வீட்டு உற்பத்திகளை மேம்படுத்தவும், அவர்களது வருமானத்தை அதிகரிக்க செய்யவும் இன்று ஆரம்பிக்கப்படும் இந்த சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வேலைத்திட்டத்தினூடாக முடியும் என நாம் நம்புகின்றோம்.
எமது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தது போன்று, நாடு முழுவதும் 500 கிராமங்களை உற்பத்தி கிராமங்களாக இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்வோம். அதில் சமுர்த்தி பயனாளர்கள் மாத்திரமன்றி குறைந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் உற்பத்தி நடவடிக்கையில் பங்களிப்பு செய்யும் அனைவரும் இணைத்துக் கொள்ளப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உள்ளாகியுள்ளது. நமது நாடும் அப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. ஆனால் அனைவரதும் ஒத்துழைப்புடன் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முறையாக முன்னோக்கி முன்னெடுத்து செல்ல எமக்கு இன்று முடிந்துள்ளது. அது தொடர்பில் மக்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றமை அரசாங்கத்திற்கு வழங்கும் பலம் என்பதை நான் இங்கு நினைவூட்ட வேண்டும்.
தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லும் நோக்கில் நாம் பணியாற்றி வருகின்றோம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இன்று ஆரம்பிக்கப்படும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக கிராம மக்களை நேரடியாக நாட்டின் உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்க செய்ய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மாற்று வருமான மார்க்கம் எற்படுத்தப்படுவதன் மூலம் அவர்களது வாழ்க்கை நிலையும் உயர்வடையும்.
இன்று இந்த வீட்டை பெற்றுக் கொள்ளும் மக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் நாளை முதல் புதிய வாழ்க்கையை அனுபவிக்க போகின்றார்கள். புதிய எதிர்பார்ப்புகளுடன் அவர்களுக்கு பணியாற்ற முடியும்.
கொவிட் தொற்று நிலைமையை காரணங்காட்டி நாம் ஒன்றும் செய்யாதிருப்பதை காணவே எமது எதிர்க்கட்சி விரும்புகிறது. கொவிட் இல்லாத காலத்திலும் ஒன்றும் செய்யாதவர்கள், தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கண்டிருக்கலாம். இவை மக்களுக்கு மறைக்கக் கூடியவை அல்ல.
அதனால் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாம் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் எமது நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் நாம் பணியாற்றுவோம்.
இன்று இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிராம பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இராஜாங்க அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், சௌபாக்கியா மேம்பாட்டு பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகின்றேன்.” என பிரதமர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment