நிதி அமைச்சரானார் பஷில் ராஜபக்ஷ ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சு ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

நிதி அமைச்சரானார் பஷில் ராஜபக்ஷ ! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சு !

நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை நிதியமைச்சராகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சு விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்வின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பசில் ராஜபக்ஷ, 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார்.

அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.
கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்கு தலைமை வகித்த பசில் ராஜபக்ஷ, கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.

பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பசில் ராஜபக்ஷ, உள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment