நபிகளார் பற்றிய பதிவு என்னை இனவாதியாக சித்தரிக்கும் அரசியல் சூழ்ச்சி என்கிறார் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ஜெயசிறில் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

நபிகளார் பற்றிய பதிவு என்னை இனவாதியாக சித்தரிக்கும் அரசியல் சூழ்ச்சி என்கிறார் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ஜெயசிறில்

என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள் நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகமாநாட்டில் தெரிவித்தார்.

குறித்த ஊடகமாநாடு நேற்று (30 )பிற்பகல் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கூறியதாவது, கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதூதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை. ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன்.

வெறும் அரசியலுக்காக அந்த மாமனிதரை கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனானாலும் பொது வெளியில் இவ்வாறு அவமானப்படுத்தப்படக் கூடாது.

தாயின் காலடியில் சுவர்க்கத்தைக் காணலாம் என்றார் அவர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறோம் நாம். தாயின் மகத்துவத்தை அனைத்து சமயங்களும் உயர் நிலையிலேயே வைத்து போற்றுகின்றன. 

அதுபோல சகல சமயங்களும் போதனைகளும் மனிதர்களை புனிதனாக்கவே நல்வழிப்படுத்துவதற்காகவே தோற்றம் பெற்றன.

சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனைய மதங்களை மதித்து நடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள், இன ஜக்கியத்துடன் செயற்படுபவர்கள்.

இன மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவன் நான். இரு இனங்களுக்கும் தலைவனாக இருக்கின்ற நான் இறைதூதரைப் பற்றி விமர்சிப்பேனா? சாதாரண சிறுகுழந்தைக்கும் இது விளங்கும்.

எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். எங்களை என்னவேணுமென்றாலும் ஏசுங்கள், தூற்றுங்கள். ஆனால் இறைதூதரை இறைவனை கொச்சைப்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

(காரைதீவு நிருபர் - வி.ரி. சகாதேவராஜா)

No comments:

Post a Comment