சினிமா திரையரங்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறை தரமற்ற நிலையில் காணப்படுவதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
அதனால் சினிமா திரையரங்கங்கள் தொடர்பில் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சரித்த ஹேரத் திங்கட்கிழமை நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் 2016 மற்றும் 2017 நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு இந்த குழுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் மற்றும் நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள, அறவிடப்படாத திரைப்பட தயாரிப்பு கடன்கள் 14 கோடியே 12 இலட்சத்தி 92,087 ரூபாய் என கோப் குழுவில் புலப்பட்டது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுக் கூட்டத்தில் சினிமா திரையரங்கங்களை நவீனமயப்படுத்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், அவற்றின் முன்னேற்றம் குறித்து அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டு பூர்த்தியடையும்போது கூட்டுத்தாபனம் 09 வங்கிக் கணக்குகளை பேணியிருப்பதுடன், சராசரியாக இவற்றின் மாதாந்த இருப்பு 29.2 மில்லியன் ரூபா என்றும் இங்கு புலப்பட்டது. இந்த நிறுவனத்தில் உரிய நிதி முகாமைத்துவம் இன்மை பாரிய பிரச்சினை என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் பெயரில் அருங்காட்சியகம் மற்றும் சினிமா பாடசாலையொன்றை அமைப்பதற்கு 99.9 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 05ஆம் திகதி இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காலத்துக்குள் இதன் பணிகள் பூர்த்தி செய்யப்படாமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கட்டுமானத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை. உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்யுமாறும் கோப் குழு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாசவுக்குப் பணிப்புரை விடுத்தது.
சினிமா பாடசாலையொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூற்று ஆய்வினை மேற்கொள்றுமாறும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு குழு மேலும் ஆலோசனை வழங்கியது.
No comments:
Post a Comment