உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிக்கான தகுதிகாண் போட்டியின் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை 3 க்கு 0 என்ற நேரடி செட் கணக்கில் வெற்றியீட்டியது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் சர்வதேச தரப்படுத்தலில் 136 ஆவது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தான் கரப்பந்தாட்ட அணியை 55 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி எதிர்கொண்டது.

நட்சத்திர வீரர்கள் மூவர் நேற்றைய போட்டியில் விளையாடாத நிலையில் முதல் செட்டில் சற்று தடுமாற்றத்தை இலங்கை அணி எதிர்கொண்டது.

இரண்டு அணி வீரர்களும் மிகவும் போராட்டத்துடன் முதல் செட்டை விளையாடிருந்தனர். எனினும், இந்த செட்டை 25 க்கு 23 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இதையடுத்து, பல்வேறு திட்டங்களுடன் களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது செட்டை 25 க்கு 13 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வென்று முன்னிலை பெற்றது.

மூன்றாவது செட்டை வென்றால் மாத்திரமே போட்டியில் நிலைத்திருக்க முடியும் என்ற கட்டயாத்தில் களமிறங்கிய உஸ்பெகிஸ்தான் அணியினர் இலங்கை அணியினருக்கு கடும் சவாலை அளித்தனர்.

இந்த ‍செட்டில் 20 ஆவது புள்ளி வரை உஸ்பெகிஸ்தான் அணியினர் முன்னிலை பெற்றிருந்தனர். இதன் பின்னர் இலங்கை அணியினர் கடுமையாக போராடி 25 க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.

இதன்படி இலங்கை அணி 25 க்கு 23, 25 க்கு 13, 25 க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களையும் கைப்பற்றி இப்போட்டியில் வெற்றியீட்டினர்.

No comments:

Post a Comment