(எம்.ஆர்.எம்.வசீம்)
இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண 1956 இல் இருந்து ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் முயற்சித்தார்கள். என்றாலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. என்றாலும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு ஒருபோதும் முன்னுக்கு செல்ல முடியாது. அத்துடன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைத்து இதனை செய்திருந்தால் எமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறைந்திருக்கும் என்றார்.
No comments:
Post a Comment