(எம்.மனோசித்ரா)
நாட்டில் சில நிகழ்வுகள் மற்றும் உற்சவங்களைக் கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது உப கொத்தணிகள் உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது வைத்தியசாலை ஊழியர்களும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது. இவர்களில் கனிசமானளவானோர் இரு கட்டங்களாகவும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மாத்திரமின்றி அடிப்படை சுகாதார விதிமுறைகளையும் சகலரும் பின்பற்றினால் மாத்திரமே கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள முடியும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பியது. எவ்வாறிருப்பினும் தற்போது டெல்டா பரவல் காரணமாக ஆபத்து அதிகரித்துள்ளதாகவே கருதப்படுகிறது.
தற்போது சில நிகழ்வுகள் அல்லது வைபவங்களை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் உப கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment