மன்னார் ஊடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 1,350 கிலோ மஞ்சள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

மன்னார் ஊடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 1,350 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1350 கிலோ உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக உலர்ந்த மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடற் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (11) காலை மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் பொலிஸார் ஈடுபட்டனர்.

இதன்போது வேதாளை மீன்பிடி துறைமுகம் கடலில் பதிவு எண் இல்லாத சந்தேகத்திற்கிடமான நின்ற நாட்டுப் படகொன்றை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த படகை நோக்கி பொலிஸார் கடலில் செல்லும் ஸ்கூட்டர் மூலம் அதனை நோக்கி பயணித்துள்ளனர். இதன்போது பொலிஸார் வருவதைக் கண்ட படகில் இருந்த நபர்கள் கடலில் குதித்து தப்பியோடியுள்ளனர்.

பின்னர் பொலிஸார் குறித்த படகை சோதனையிட்ட போது அதில், மூட்டை மூட்டையாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சமையல் மஞ்சள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நாட்டு படகுடன், சமையல் மஞ்சள் மூட்டைகளை கைப்பற்றிய பொலிஸார் மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து, எடையிட்டு பார்த்த போது அது மொத்தமாக 1,350 கிலோ கிராம் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மஞ்சள் மூட்டைகளையும், நாட்டு படகையும் மெரைன் பொலிஸார் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அது தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், தப்பியோடியவர்களை தேடி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் குறித்து மெரைன் பொலிஸார் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணம், சீனியப்ப தர்ஹா, சுந்தரமடையான், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக மன்னார் வளைகுடா கடல் வழியாக பெருமளவான கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment