ஒப்பந்த விவகாரங்களில் சந்தேகம் இருந்த போதிலும் ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர்களில் தொடரில் பங்கெடுக்க இலங்கை, இங்கிலாந்துக்கு செல்லும் என்பதை இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) வழங்கும் ஒப்பந்தத்தில் வீரர்கள் கையெழுத்திட மறுத்ததை அடுத்து இந்த சுற்றுப்பயணம் குறித்து சந்தேகம் எழுந்தது. எனினும் வீரர்கள் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இங்கிலாந்து செல்வார்கள் என்றும் அவர்கள் திரும்பி வந்தவுடன் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் ஆஷ்லே டி சில்வா உறுதிபடுத்தியுள்ளார்.
சுற்றுப்பயணம் ஆபத்தில் உள்ளது என்று சிலர் கூறியுள்ளனர், எனினும் நாங்கள் சுற்றுப் பயணத்துக்காக முன்னேற்றகரமான நடவடிக்கையில் உள்ளோம்.
இந்த உத்தரவாதத்தை நாங்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துக்கு அளித்துள்ளதாகவும் ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.
குசல் பெரேரா மற்றும் 23 பிற வீரர்கள் இலங்கை கிரிக்கெட்டின் செயல்திறன் அடிப்படையிலான வருடாந்திர சம்பள ஒப்பந்தத்தை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் நிராகரித்தனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் இரு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment