(செ.தேன்மொழி)
மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் மரண தண்டனை கைதிகளால் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் புதன்கிழமை கைவிடப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் , சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், புதன்கிழமையுடன் அது கைவிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், இதன்போது வெலிக்கடை சிறைசாலையில் உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் கூறையின் மேல் ஏறியிருந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கைதிகளின் இந்த கோரிக்கை தொடர்பில் 5 மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன், அது தொடர்பில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் கைதிகளுக்கு தெளிவிப்படுத்தியிருந்தனர். எனினும் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் மீண்டும் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன், அவர்களது கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு விளக்கியிருந்தனர்.அதற்கமைய கைதிகள் தங்களது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
No comments:
Post a Comment