நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் இடம்பெற்ற இன வெறி பிடித்த தீவிரவாத தாக்குதல் : விமர்சனங்களை அடுத்து விலகினார் திரைப்படத் தயாரிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Monday, June 14, 2021

நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் இடம்பெற்ற இன வெறி பிடித்த தீவிரவாத தாக்குதல் : விமர்சனங்களை அடுத்து விலகினார் திரைப்படத் தயாரிப்பாளர்

நியூஸிலாந்து கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த திரைப்படத்திற்கு எழுந்த விமர்சனங்களை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளர் விலகியுள்ளார்.

தயாரிப்பாளர் பிலிப்பா காம்ப்பெல் திரைப்படத்தில் இணைந்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார், மேலும் திரைப்படம் ஏற்படுத்தும் காயத்தை அவர் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற நிகழ்வுகளை திரைப்படம் எடுப்பது மிகவும் கசப்பான அனுபவம் என்பதை நான் இப்போது ஒப்புக் கொள்கிறேன், இதுபோன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் போது நியூஸிலாந்து பிதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எவ்வாறு செயற்பட்டார் என்பது தொடர்பானது ஆகும்.

2019 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி இனவெறி பிடித்த தீவிரவாதி ஒருவர் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கியால் சுடுவதை பேஸ்புக்கில் நேரலை செய்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு நியூசிலாந்தின் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பதிவானது. இந்த சம்பவத்தில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

அதன்பின் அவரை அடையாளம் கண்டு கைது செய்ததில், அவுஸ்திரேலியாவில் பிறந்த பிரன்டன் டாரன்ட் (வயது 28) என்பது தெரிந்தது. அதன் பின்பு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் குறித்து பிதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளதாவது, இந்த திட்டத்திற்கு இது சரியான நேரம் இல்லை என்றும் தவறான விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்தார்.

இது எனது தனிப்பட்ட பார்வையாகும், இது நியூசிலாந்திற்கு மிக விரைவில் மற்றும் மிகவும் உணர்வுபூர்வமானதாக உணர்த்துகிறது," ஒரு கட்டத்தில் சொல்லப்பட வேண்டிய பல கதைகள் இருக்கும்போது, அவற்றில் ஒன்று என்னுடையதாக இருக்க வேண்டும் என நான் கருதவில்லை என அவர் உள்ளூர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதல்களில் ஹுசைன் என்ற சகோதரரை இழந்த ஆயா அல்-உமாரி, இது "சொல்லப்பட வேண்டிய கதை அல்ல" என தெரிவித்துள்ளார்.

திரைப்படம் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி தேசிய இஸ்லாமிய இளைஞர் சங்கத்தின் மனு கிட்டத்தட்ட 60,000 கையெழுத்துக்களை சேகரித்துள்ளது, இந்த திரைப்படம் "பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் ஓரங்கட்டிவிடும், அதற்கு பதிலாக ஒரு வெள்ளை பெண்ணின் பதிலை மையப்படுத்துகிறது" என தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் குறித்து முஸ்லிம் சமூகத்தினரிடம் முறையாக ஆலோசிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment