ஒன்றிணையாத பட்சத்தில் எதனையும் எம்மால் மாற்ற முடியாது - கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

ஒன்றிணையாத பட்சத்தில் எதனையும் எம்மால் மாற்ற முடியாது - கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க

(நா.தனுஜா)

நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், பாராளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதையும் முன்னிறுத்தி ஒன்றிணையாத பட்சத்தில், எதனையும் எம்மால் மாற்ற முடியாது. அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மைத் தெரிவு செய்த பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் இன்னும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய அதேவேளை, பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் தீவிர கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர் கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

'முடக்கத்திலிருந்து பெற்றுக் கொண்ட பாடங்கள் : தகைமை வாய்ந்த தலைமைத்துவத்தினதும் செயற்திறனான கட்டமைப்பினதும் அவசியம்' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது அண்மைக் காலத்தில் பல்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்ட கரிசனைகள் மற்றும் செய்தி அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கையானது பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பது தெளிவாகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் எவ்வாறு பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்? அதற்கு முதலில் ஏன்? என்ன? யார்? எப்படி? என்ற கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது அவசியமாகும்.

அதன்படி 'ஏன்?' என்ற கேள்விக்கான பதிலாக பொருளாதார அபிவிருத்தியின் அவசியத்தை இனங்காண வேண்டும். 'என்ன?' என்ற கேள்விக்கு விடையாக பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பதைக் கண்டறிய வேண்டும். 'யார்?' என்பதன் மூலம் மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தலைமைத்துவத்தை வழங்கப்போவது யார் என்பதை அடையாளங்காண வேண்டும். இறுதியாக 'எப்படி?' என்பதன் ஊடாக 'என்ன' என்ற கேள்விக்கு பதிலாகக் கிடைத்த நடவடிக்கைகளை 'யார்' என்ற கேள்விக்குப் பதிலாகக் கிடைத்த தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி எப்படி அமுல்படுத்துவது என்று தீர்மானிக்க வேண்டும்.

இவற்றிலே 'ஏன்', 'என்ன' என்பது குறித்துப் பலரும் கலந்துரையாடுகின்றார்கள். எமது அன்றாட வாழ்வையும் அடுத்த சந்ததியினருக்கான எதிர்காலத்தையும் மேம்படுத்துவதற்கும் எம்மிடமுள்ள வளங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்துவதற்கும் 'ஏன்?' என்ற கேள்வி பெரிதும் உதவும். அதற்காக நாம் உற்பத்திப் பொருட்கள், சேவை வழங்கல்கள், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். அதேவேளை அதிகமாகப் பேசப்படும் 'ஏன்', 'என்ன' ஆகிய கேள்விகளுக்கான பதில்களை விடுத்து, அதிகம் பேசப்படாத 'யார்', 'எப்படி' ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் தொடர்பில் நாம் விரிவாகப் பேச வேண்டும்.

அதன்படி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஏனைய தகுதி வாய்ந்த குழுவினருடன் இணைந்து முறையான தலைமைத்துவத்தை வழங்கக்கூடியது யார் என்று கண்டறிய வேண்டும். அதன் பின்னரே அமுலாக்கம், கண்காணிப்பு, மதிப்பீடு ஆகிய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும். பொருளாதார அபிவிருத்தி என்பது தலைமைத்துவத்தின் தகைமைகளிலிருந்து பிரிக்க முடியாததாகும். தலைமைத்துவத்தின் இயலுமை மற்றும் தகைமைக்கு அமைவானதாகவே பொருளாதார அபிவிருத்தி அமையும்.

தகைமை வாய்ந்த தலைவர்கள் மிகவும் கடினமான தெரிவுகளையும் தீர்மானங்களையும் மேற்கொள்வார்கள். அதுமாத்திரமன்றி எதிர்கால நலன்களுக்காக, நிகழ்காலத்தில் நெருக்கடிகளையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு நாட்டு மக்களை இசைவாக்கமடையச் செய்வார்கள். அவர்கள் தமது ஆலோசகர்களாக புத்திஜீவிகளையும் நேர்மையாளர்களையும் தெரிவு செய்வார்கள். ஆரோக்கியமான விமர்சனங்களை அவர்கள் வரவேற்பார்கள். நன்கு ஆய்ந்தறிந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள். செயற்திட்டங்களை அமுலாக்குவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவார்கள். அவர்கள் தமது நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் அதேவேளை, அதன்மூலம் கிடைக்கப்பெறும் பெறுபேற்றின் அடிப்படையில் செயற்படுவார்கள் என பல விடயங்கள் குறித்த தெளிவுப்படுத்தியிருந்தார்.

No comments:

Post a Comment