செலெந்திவா முதலீட்டுக் கம்பனியின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்துங்கள் - ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

செலெந்திவா முதலீட்டுக் கம்பனியின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்துங்கள் - ஐக்கிய தேசியக் கட்சி

(நா.தனுஜா)

அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட செலெந்திவா முதலீட்டுக் கம்பனியின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது வரையறுக்கப்பட்ட செலெந்திவா முதலீட்டுக் கம்பனியின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். செலெந்திவா முதலீடுகள் நிறுவப்பட்டமை தொடர்பில் எமது கட்சியின் மத்திய குழுவினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தற்போது கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்தினால் போக்குவரத்து முடக்கம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் மட்டுப்பாடு என்பன அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பை அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிகங்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2020 ஜுலை மாதம் ஆரம்பத்திலிருந்து கொழும்பு கிரான்ட் ஹயர், சுற்றுலா ஹோட்டல், கிரான்ட் ஒரியன்ரல் ஹோட்டல் ஆகிய மூன்று அரச நிறுவனங்களின் உரித்தும் புனர்நிர்மாணம் செய்யும் பொறுப்பும் இந்தக் கம்பனியிடம் வழங்கப்பட்டிருந்தது.

எது எவ்வாறெனினும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அமைச்சு மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் கட்டடங்கள் உள்ளடங்கலாக அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி மற்றும் சொத்துக்களின் இயக்கம் மற்றும் விரிவாக்கல் பொறுப்பு என்பன செலெந்திவா முதலீட்டுக் கம்பனியிடம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனின் செலெந்திவா முதலீட்டுக் கம்பனிக்கு உரிய சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

இத்தகைய கம்பனியொன்றை நிறுவும்போது, அரசின் நிதியை நிர்வகிப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அமைவாகக் குறித்த கம்பனி பெற்றுக் கொண்டுள்ளது என்ற அனுமதி பாராளுமன்றத்தினால் வழங்கப்படுவது அவசியமாகும்.

எனவே இத்தகைய கம்பனியொன்றை நிறுவியுள்ளதன் மூலம் பாராளுமன்றத்தின் சுயாதீனத்தன்மை மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment