மூன்று நாட்களில் 40,000 பேருக்கு தடுப்பு மருந்தேற்ற திட்டம் : நுவரெலியா மாவட்ட செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

மூன்று நாட்களில் 40,000 பேருக்கு தடுப்பு மருந்தேற்ற திட்டம் : நுவரெலியா மாவட்ட செயலாளர்

நுவரெலியா மாவட்டத்தில் மூன்று நாட்களில் 40,000 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று (10.06.2021) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களில் 40,000 தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஆரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 50,000 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்க பணியாளர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை மின்சார சபை, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, மஸ்கெலியா உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றது. இங்குள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கப்படும். 

நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்றுமுன்தினம் 09.06.2021 நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது 3000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்றையதினம் (10.06.2021) வியாழக்கிழமை கொத்மலை வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பேகமுவ பகுதிகளை சேர்ந்த அரச பணியாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குமாக 6000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏதிர்வரும் மூன்று தினங்களில் அதாவது 12, 13, 14 ஆம் திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் 98 கிராம சேவகர்கள் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 40,000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்களினதும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார அதிகாரிகள் பொலிஸார், இராணுவத்தினர் உட்பட அனைவருடைய ஒத்தழைப்பையும் பெற்றுக் கொண்டு மிகவும் அமைதியான முறையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வருகின்றவர்களுக்கு விசேடமான போக்குவரத்து அனுமதிகள் தேவையில்லை. அவர்கள் கிராம அதிகாரிகள் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகின்ற இடங்களை அறிந்து கொண்டு நேரடியாக வந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

நுவரெலியா நிருபர்

No comments:

Post a Comment