இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொவிட்-19 3ஆம் அலையின் உச்சத்தை தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
ஆயினும் திட்டமிட்டபடி ஜூன் 14 இல் பயணத்தடை நீக்கப்படுமென நேற்றையதினம் (10), இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, மேலும் ஒரு வாரத்திற்கு பயணத்தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 26 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளது.
பயணத்தடை நீடிக்கப்பட்டாலும் ஆடை கைத்தொழில், நிர்மாணப்பணிகள், அத்தியாவசிய சேவைகள் என்பன வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார மத்திய நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் திறக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
விவசாய நடவடிக்கைகள், சேதனப்பசளை உற்பத்தி ஆகியனவும் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment