ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது : குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை, தேர்தலில் போட்டியிடவும் முடியாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது : குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை, தேர்தலில் போட்டியிடவும் முடியாது

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.

இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது; தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது; காலனித்துவ கால அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியது உட்பட 6 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆங் சான் சூகியை இழிவுபடுத்துவதற்கும் ராணுவ ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யாக புனையப்பட்டவை என ஆங் சான் சூகியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கு விசாரணையை ராணுவ அரசு அடுத்த வாரம் (14 ஆம் திகதி) தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு விசாரணை தலைநகர் நேபிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் எனவும், வாரத்தில் 2 நாட்கள் விசாரணை நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட நாட்டில் அடுத்து நடைபெறும் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment