புத்தாண்டு கொத்தணி என்பதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதனைக்கூற விழைகிறது ? : இவ்வாறான செயற்பாடுகள் தம்மிக பாணத்தை போன்று கேலிக்குரியதொரு விடயமாகும் - பிமல் ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

புத்தாண்டு கொத்தணி என்பதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதனைக்கூற விழைகிறது ? : இவ்வாறான செயற்பாடுகள் தம்மிக பாணத்தை போன்று கேலிக்குரியதொரு விடயமாகும் - பிமல் ரத்னாயக்க

(எம்.மனோசித்ரா)

புத்தாண்டு கொத்தணி என்பதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதனைக்கூற விழைகிறது ? கொவிட் கொத்தணிகளுக்கு பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டுவது மக்களை அறிவுறுத்துவதற்காகும். ஆனால் அரசாங்கம் தற்போது உருவாகியுள்ள கொத்தணியை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்த தவறியுள்ளது. அதனால்தான் அடிப்படையின்றி 'புத்தாண்டு கொத்தணி' என்று பெயர் குறிப்பிடப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது அறிவிக்கப்படுகின்ற கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் எமக்கு சந்தேகம் நிலவுகிறது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மோசமானதொரு அரசியல் சூது விளையாட்டை அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் பி.சி.ஆர். விவகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கொவிட் கட்டுப்படுத்தலுக்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன் மூலம் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால் ஞாயிறுக்கிழமை தெஹியத்தகண்டி பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் சிறிய ரக லொறியொன்றில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், இணையத்தள பிரதான ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தொற்றாளர்களுக்கு ஆகக்குறைந்தது வேன் ஒன்றைக்கூட ஏற்பாடு செய்து கொடுக்க முடியாத ஜனாதிபதி செயலணி என்ன செய்து கொண்டிருக்கிறது ? இதன் மூலம் என்ன பயன்?

ஜனாதிபதி செயலணி ஒருபுறமிருக்க மறுபுறம் அமைச்சர்கள் மூவர் உட்பட விடயத்திற்கு பொறுப்பான 6 அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இவற்றுக்கு புறம்பான வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இறுதியான ஒரு தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாமையினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்றால் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வயதில் கூடிய முதியோருக்கும், அதன் பின்னர் முன்னிலையில் உள்ள சுகாதார தரப்பினருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் அதனை மீறி கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை திட்டமிடல் இன்றி சகலருக்கும் வழங்கியுள்ளது. இதனால் இரண்டாம் கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அதற்குரிய காலம் கடந்தும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமலுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு பேலியகொடை கொத்தணி எனக் கூறியமை தவறாகும். காரணம் கடந்த 10 மாதங்களாக பல பகுதிகளிலிருந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

எவ்வாறிருப்பினும் பெயருக்காவது பேலியகொடை என்ற இடத்திலிருந்து இந்த கொத்தணி தோற்றம் என்று தெரிவிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது புத்தாண்டு கொத்தணி என்று பெயரிட்டுள்ளதன் மூலம் மக்களுக்கு அராங்கம் கூறும் பணிவிடை என்ன?

ஆசைக்காக கொத்தணிகளுக்கு பெயர் வைக்கப்படுவதில்லை. குறிப்பிட்டவொரு கொத்தணிக்கு பெயர் சூட்டுவதன் மூலம் அந்த இடம் அபாயம் மிக்கது. அங்கிருந்தான் இந்த கொத்தணி பரவியுள்ளது. எனவே இப்பிரதேசம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்துவதே கொத்தணிகள் பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்தப்படுவதற்கான நோக்கமாகும். 

ஆனால் தற்போது புத்தாண்டு கொத்தணி என்பதன் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எதனைக்கூற விழைகிறது ? அவ்வாறெனில் எதிர்வரும் வாரங்களில் வெசாக் கொத்தணி, ரமழான் கொத்தணி என்பன உருவாகுமா?

இவ்வாறான செயற்பாடுகள் பெயரளவிலேனும் இலவசமான சுகாதார சேவையெனக் கூறப்படும் சுகாதார கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களாகும். இது தம்மிக பாணத்தை போன்று கேலிக்குரியதொரு விடயமாகும். இது மாத்திரமின்றி பிரதேசங்களை தனிமைப்படுத்தும் தீர்மானங்கள் கூட விஞ்ஞானபூர்வமாக எடுக்கப்படாமல் அரசியல் ரீதியாகவே எடுக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment