பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா 2ஆவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.
கடந்த சில நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தொற்றுப் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஏராளமான சினிமா நடிகர், நடிகைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
‘கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கவலைப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். நானும் என் குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைபடி சிகிச்சை எடுத்து வருகிறோம்.
கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment