(எம்.மனோசித்ரா)
கொவிட் மூன்றாம் அலையின் கீழ் அடையாளங் காணப்படும் பெரும்பாலான நோயாளர்களில் மோசமான நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு ஒட்சிசன் விநியோகத்துடன் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான செயற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் மாகாண மட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள 25 வைத்தியசாலைகளில் மோசமடைந்த நிலைமையை அடையும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய விசேட உயர் சிகிச்சைப் பிரிவை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஒட்சிசன் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அடையாளங் காணப்பட்ட தொலை பிரதேசங்களில் அமைந்துள்ள 15 மருத்துவமனைகளில் ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்களைத் தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்திற்காக 100 நடமாடும் மருத்துவ ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்கள் வீதம் 25 மாவட்டங்களுக்கு 2,500 இயந்திரங்களை வழங்குவதன் மூலம் மருத்துவமனைகளில் சிலின்டர்களில் ஒட்சிசன் வழங்கும் தேவையைக் குறைக்கவும், மருத்துவ ஒட்சிசனுக்கு அதிகரிக்கும் கேள்விக்கான விநியோகத்திற்காக மாதாந்தம் 1,20,000 லீற்றர்கள் திரவ ஒட்சிசனை இறக்குமதி செய்து போதுமானளவு இருப்பை நாட்டில் பேணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment