(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டை கட்டுப்படுத்த நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்துக்கு ஆரம்பத்திலேயே தெரிவித்தோம். என்றாலும் பொருளாதாரத்தை காரணம் காட்டி அதனை மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து மரணங்களும் அதிகரித்து செல்கின்றன. அதனால் கொவிட்டில் மரணிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொவிட் காரணமாக இடம்பெறும் மரணங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பலி பூசையாகவே நாங்கள் காண்கின்றோம். இந்த நிலை ஏற்படும் என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக கலந்துரையாட ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் எந்தவொரு அரசியல் கட்சியையும் அழைக்கவில்லை. ஆரம்ப கலந்துரையாடலின்போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் தயாரில்லை. அதனால்தான் கலந்துரையாடல்களுக்கு அழைக்கவில்லை.
அத்துடன் பி.சி.ஆர். பரிசோதனைகளை நாளொன்றுக்கு 5 ஆயிரம் வரை மேற்கொள்ளுமாறு நாங்கள் தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது நாளொன்றுக்கு தொற்றாளர்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக கண்டுபிடிக்கப்படுகின்றபோது, அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தனியார் துறையினருக்கு வழங்கியிருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனை அனுமதியையும் நிறுத்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. ஏனெனில் தனியார் துறையினர் பி.சி.ஆர். பரிசோதனையை பணத்துக்கு மேற்கொள்வதால், அவர்களிம் வரும் அனைவருக்கும் அதனை மேற்கொள்வார்கள். இதனால் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பகிரங்கமாக வெளிப்படும். அதை மறைப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என்றார்.
No comments:
Post a Comment