விஜயதாஸவின் கருத்து உண்மைக்கு புறம்பானது, டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

விஜயதாஸவின் கருத்து உண்மைக்கு புறம்பானது, டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இராஜதுரை ஹஷான்

உத்தேச புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினர் எதிர்வரும் ஜூன் மாதம் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார்கள். டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் முறைமை புதிய அரசியலமைப்பின் பிரதான அம்சமாக கருதப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

களனி ரஜமஹ விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சாத்தியமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அவரது அரசியல் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்க அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பு குறித்து தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய இரு பிரதான வாக்குறுதியில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அரச நிர்வாகத்திற்கு தடையாக இருந்த அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றியுள்ளோம்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நிபுணர் குழுவின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர் குழுவினர் அரசியல் கட்சிகளிடமும், சிவில் அமைப்பினரிடமும் மற்றும் பொது மக்களிடமிருந்தும் அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகளை கோரியுள்ளார்கள்.

புதிய அரசியலமைப்பு தொடர்பிலான முழு வரைபினை நிபுணர் குழுவினர் எதிர்வரும் ஜூன் மாதம் அரசாங்கத்திடம் கையளிப்பார்கள். இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம். எக்காரணிகளுக்காகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்படாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment