துறைமுக நகர பாராளுமன்ற விவாதம் குறித்து ரணில், மங்கள தலைமையில் கலந்துரையாடல் - பலருக்கும் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 15, 2021

துறைமுக நகர பாராளுமன்ற விவாதம் குறித்து ரணில், மங்கள தலைமையில் கலந்துரையாடல் - பலருக்கும் அழைப்பு

(லியோ நிரோஷ தர்ஷன்)

துறைமுக நகர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பலரும் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இணையம் வழி ஊடாக இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலானது, துறைமுக நகரை இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொடுக்க கூடியதொன்றாக மாற்றுதல் மற்றும் பாராளுமன்ற விவாதத்தை எதிர்கொள்ளுதல் போன்றவற்றுக்கு ஆலோசணை வழங்கும் வகையிலேயே இடம்பெறவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் முன்வைத்துள்ள துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டமூலத்தை இலங்கைக்கு பயன்தரக்கூடிய வகையில் முழுமையாக மாற்றியமைப்பதற்கு தேவையான அழுத்தத்தை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரயோகிப்பது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் சர்வதேசத்திலிருந்து கறுப்பு பணத்தை கொண்டு வந்து அதனை இங்கு மாற்றக்கூடிய நிலைமையும் ஏற்படும். அவ்வாறெனில் இலங்கை மீண்டும் ஒழுக்கமற்ற வரி செயற்பாடுகளுடன் தொடர்புடைய கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும். தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தில் இவ்வாறான நிலைமை தேசிய பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படும்.

மறுபுறம் முக்கிய பல அதிகாரங்கள் துறைமுக நகரின் பிரதான பங்குதாரரான சீன வசமாவது தேசிய சட்ட கட்டமைப்பிற்கு மாத்திரமல்ல பிராந்திய ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைமை இலங்கைக்கு ஏற்படலாம். 

ஏனெனில் இந்து மா சமுத்திரத்தின் கடல் வழி பொருளாதாரத்தில் துறைமுக நகர் எதிர்காலத்தில் முக்கிய இடம்பெறும். இந்த சூழல் சீனாவிற்கு சாதமான நிலைமையை தோற்றிவிக்கின்றது. துறைமுக நகரிற்கு இடது புறமாக அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் சீனாவுடன் கூட்டு முயற்சியில் இலங்கை அபிவிருத்தி செய்துள்ளது.

No comments:

Post a Comment