நாட்டிலுள்ள மூன்று மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க முடியுமென அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் 09 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என பைஸர் நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி செயற்பட்டால் சிறந்த பிரதிபலனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவின் தயாரிப்பான பைஸர் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கிணங்க ஐந்து மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 06 இலட்சம் கொவெக்ஸ் தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் 12 முதல் 16 வாரங்களுக்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், வெளிநாடுகளிலிருந்து கொவெக்ஸ் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment