நாட்டை முடக்க முடியாது, நாம் ஒன்றாக கைகோர்த்து சவால் மிகுந்த காலத்திற்கு முகங்கொடுப்போம் : அன்று ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அதிகாரத்தை பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்தது - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

நாட்டை முடக்க முடியாது, நாம் ஒன்றாக கைகோர்த்து சவால் மிகுந்த காலத்திற்கு முகங்கொடுப்போம் : அன்று ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அதிகாரத்தை பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்தது - பிரதமர் மஹிந்த

நாம் நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (07) நடைபெற்ற ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டளவில் திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டிருந்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டம் கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. 

இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகள் பிரதமரின் தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24 கிலோமீற்றர் வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் போது இரத்தினபுரி மற்றும் பெல்மதுல்ல வரை இந்த அதிவேக நெடுஞ்சாலை நீடிக்கப்படும்.

ருவண்புர அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைத்தல், செலவை குறைத்தல், நேர வீண்விரயத்தை குறைத்தல், தேயிலை, ஆடை, சிறு ஏற்றுமதி பயிர் மற்றும் இரத்தினக்கல் சந்தை மற்றும் விநியோக இடங்களுக்கான அணுகலை எளிதாக்கல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்பார்க்கப்படும் அனுகூலங்கள் பலவாகும்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சப்ரகமுவ மாகாண மக்களுக்கு மிகவும் அண்மித்த ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் தற்போது ஆரம்பிப்பது இலங்கையின் ஏழாவது அதிவேக நெடுஞ்சாலையாகும். அன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப காலப்பகுதி முதல் சப்ரகமுவ மாகாணத்தின் எமது அன்பார்ந்த மக்கள் இரத்தினபுரிக்கு அதிவேக நெடுஞ்சாலையொன்றை எப்போது நிர்மாணிப்பீர்கள் என எம்மிடம் கேட்டிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது. அது தொடர்பில் கவனம் செலுத்தி, ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டிருந்தோம்.

அன்று நாம் அதற்கான அனைத்து திட்டங்களையும் நிறைவுசெய்திருந்தோம். எனினும் அதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்தலில் தோல்வியடைந்து நாம் வீடு செல்ல நேர்ந்தது. அன்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியை நாம் விட்டு சென்ற இடத்திலிருந்து ஆரம்பித்து முன்னெடுத்து செல்லும் என எண்ணினோம். ஆனால் அவர்களுக்கு அதிகாரத்தை பறித்தெடுக்கும் தேவை மாத்திரமே இருந்ததே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை இல்லை. அதனால் நாம் ஆரம்பித்திருந்த அனைத்தும் கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டது.

அது மாத்திரமன்றி நாம் செய்தவைக்காக எம்மை பழிவாங்கினர். நீதிமன்றம் மற்றும் ஆணைக்குழுக்களின் முன் எம்மை கொண்டு நிறுத்தினர். தேசிய பாதுகாப்பும், பொருளாதாரமும் பூச்சியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டையே நாம் மீண்டும் பொறுப்பேற்றோம். எனினும் அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

நாட்டை அபிவிருத்தி செய்தல், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் போன்று இந்நாட்டு மக்களுக்கு எப்போதும் சிறந்ததை வழங்குவதே எமது தேவையாக காணப்பட்டது. அதனால் எத்தகைய தடைகள் நேரிடினும், எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேனும் நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்வைத்த கொள்கைகள் யதார்த்தமாகும் வரை அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்று ஆரம்பிக்கப்படும் ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான முதல் கட்டத்தை இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்வோம் என எமது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என்னிடம் குறிப்பிட்டனர். அவர்கள் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை அதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்நெடுஞ்சாலையின் 24 கிலோமீற்றர் வரையான முதல் கட்டத்திற்காக ரூபாய் 54.7 பில்லியன் தேசிய நிதியை அரசு செலவிடுகிறது. இதன் கட்டுமானப் பணிகளை உள்ளூர் நிறுவனமொன்றே பொறுப்பேற்றுள்ளது.

முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன் இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையான இரண்டாம் கட்டம் மற்றும் இரத்தினபுரி முதல் பெல்மதுல்ல வரையான மூன்றாம் கட்டம் என ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

அதிவேக நெடுஞ்சாலைகளே இந்நாட்டில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான திட்டமாகும். ஆனால் அவ்வாறு விமர்சித்தவர்கள் இன்று அந்த அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலமான வசதிகளை அனுபவித்து பயணித்து வருகின்றனர். நாம் அது குறித்து பெருமையடைகிறோம்.

தற்போது மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீரிகம முதல் பொதுஹெர வரையான பகுதியை வெகுவிரைவில் மக்களின் பாவனைக்காக திறந்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அது குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என நினைக்கின்றோம். அதேபோன்று பொதுஹெர முதல் கலகெதர வரையான பகுதியின் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே ஆரம்பித்தோம். இன்று நமது நாடு மட்டுமின்றி முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சவால் மிகுந்த ஒரு தருணத்திலேயே ருவண்புர அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி நமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோன்று எவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியை நாம் கைவிட்டதில்லை. கைவிடப் போவதும் இல்லை.

ஒரு சிறந்த சாலை அமைப்பு என்பது நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிடும் ஒரு காரணி என்றே நான் நம்புகின்றேன். மஹிந்த சிந்தனையில் போன்றே சுபீட்சத்தின் நோக்கிலும் நாம் அது குறித்து தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

தற்போது முழு உலகமும் கொவிட் தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. கொவிட் தொற்று காரணமாக நமக்கு நாட்டை முடக்க முடியாது. வைரஸிற்கு எதிராக போராடும் அதேவேளை நாட்டு மக்களின் பொருளாதார நிலை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவார்களாயின் இந்நிலையை கட்டுப்படுத்துவது அவ்வளது கடினமானதாக அமையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் சுகாதார பிரிவினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு நான் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாம் ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றாக கைகோர்த்து இந்த சவால் மிகுந்த காலப்பகுதிக்கு முகங்கொடுப்போம்.உங்கள் அனைவரும் சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, பவித்ரா வன்னிஆராச்சி, வாசுதேவ நாணயக்கார, ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, நிமல் லன்சா, ஜயந்த சமரவீர, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, சஞ்ஜீவ எதிரிமான்ன, காமினி வலேபொட, அனூப பாஸ்குவேல், முதிதா பிரிசாந்தி டி சொய்சா, லலித் எள்ளாவல, கயஷான் நவநந்த மற்றும் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.டப்ளிவ்ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதளுவகே மற்றும் அமைச்சின் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment