மீண்டும் சிரியாவின் ஜனாதிபதியாகிறார் பஷார் அல் அசாத் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

மீண்டும் சிரியாவின் ஜனாதிபதியாகிறார் பஷார் அல் அசாத்

உள்நாட்டு போருக்கு மத்தியில் நடந்த தேர்தலில்  சிரிய ஜனாதிபதியாக  மீண்டும் 4 ஆவது முறையாக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதி பஷார் அல் அசாத் (வயது 55) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் மெர்ஹி ஆகியோர் களமிறங்கினர். 

இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும், அசாத் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாகயும் நியாயமாகவும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்தன.

தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. பதிவான 78.6 சதவீத வாக்குகளில் பஷார் அல் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலூம் அப்துல்லா மற்றும் மஹ்மூத் மெர்ஹி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இது நியாயமாக நடத்தப்பட்ட தேர்தல் இல்லை என்று தெரிவித்துள்ளன.

ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதன் மூலம் 4 ஆவது முறையாக அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் ஆசாத் 88 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை பஷார் அல் அசாத் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் கொண்டாடுகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முன்னிலை நிலவரம் ஆசாத்துக்கு சாதகமாக இருந்ததால், பல்வேறு நகரங்களில் ஒன்றுகூடி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தெற்கு பகுதியில் உள்ள அலெப்போ, ஸ்வேதியா பகுதியிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த பத்து வருடங்களாக நடக்கும் உள்நாட்டு போரில் நிலைகுலைந்து நிற்கிறது சிரியா. ஜனநாயகத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தை மோசமான படைகளை கொண்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஒடுக்கியதற்கு எதிராக அங்கு போர் தொடங்கியது.

No comments:

Post a Comment