ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தால் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனை தெரிந்துகொண்டே எதிர்க்கட்சி எமக்கு தேவையற்ற அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொவிட்19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் புலனாய்வு தகவல்களை அன்றைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அதேபோன்று மாவனெல்லை புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தியவர்களை கைது செய்தபோது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது இது போன்ற 10 விடயங்கள் தொடர்பில் அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால்தான் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள முடியுமாகியது. தற்போது நாங்கள் தாக்குதல் தாெடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபராகும். அதனால்தான் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்.
அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தால், மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வெளிப்படுத்துவார். பல நபர்களுடனும் தொலைபேசியில் கதைப்பார். இவ்வாறான நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும். இதனை நன்கு தெரிந்து கொண்டே எதிர்க்கட்சியினர் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முயற்சிக்கின்றனர்.
அத்துடன் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, அவருக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இருப்பதனாலாகும். அதனால் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது.
ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் நீதியை பெற்றுக் கொடுப்பாேம். தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் தற்போது அது தொடர்பான விசாரணைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment