நாடு கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அதற்கான சிகிச்சை நிலையங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், கட்டில்கள், தேவையான ஒட்சிசன் ஆகியவை தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டுமென்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அச்சுறுத்தலான காலகட்டத்தில் நாடு உள்ளதாகவும் வைரஸ் தொற்று நோயாளிகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அந்த சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு பூராகவும் வைரஸ் தொற்று நோயாளர்கள் பெருமளவில் இனங்காணப்பட்டு வரும் நிலையில் அரசாங்கம் நிலைமைகளை எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென மேற்படி சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மருத்துவத்துறை சுமக்க முடியாத அளவில் நோயாளர்களின் அதிகரிப்பு ஏற்படுமானால் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு அதனை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
அதனை கருத்தில் கொண்டு போதியளவு சிகிச்சை நிலையங்களில் கொள்ளளவை அதிகரித்துக்கொள்ளல், தீவிர சிகிச்சைப் பிரிவில் வசதிகள் மற்றும் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் தேவையான அளவு ஒட்சிசனை களஞ்சியப்படுத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment