உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது, பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை - பாதுகாப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் தப்பிக்க முடியாது, பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை - பாதுகாப்புச் செயலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் விரிவாகவும் பல்வேறு கோணங்களிலும் நடைபெற்று வருவதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாதவாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார்.

குற்றவாளிகள் தப்பிக்காதவாறு சரிவர விசாரணைகள் நடத்தப்பட்டு பலமான ஆதாரங்கள் தயாரித்து நீதிமன்றில் சமர்பிக்க சிறிது காலம் தேவைப்படும் என்று தெரிவித்த அவர், இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த, அங்கவீனமுற்ற மக்களுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பான நிறுவனம் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று தான் உறுதி மொழிவழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் போது உயிர் நீத்த படைவீரர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளிக்கையில்,

ஊயிர்த்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது நீதிமன்றில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உறுதியான சாட்சியங்கள் ஆவணங்கள் சமர்பிக்க முடியுமானதாக இருக்க வேண்டும். இல்லாவிடின் குற்றவாளிகள் ஏதாவது சட்ட காரணங்களை காண்பித்து தப்பிக்க வாய்ப்புண்டு அவ்வாறு தப்பித்தால் நாங்கள் வெட்கிக் வேண்டி ஏற்படும். 

எனவே சம்பந்தபட்ட நபர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது இதன் பின்னணியில் யார் உள்ளனர் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கிவிட உள்ளதால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

இதேவேளை, புர்கா அணிவதை தடை செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது இது தொடர்பில் உங்களது கருத்து என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர்,

புர்கா என்ற வசனத்தை பயன்படுத்த நான் விரும்பவில்லை ஏனெனில் ஒரு இனத்தை மதத்தை இலக்கு வைத்து தீர்மானமில்லை மாறாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையிலான முகத்தை மூடும் சகல நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான நடவடிக்கைக்கு தேவையான சட்டத்தை வரையும் செயற்பாடே முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோ, இடையூறுகளை ஏற்படுத்தும் நோக்கமோ கிடையாது தேசிய பாதுகாப்பை இலக்கு வைத்தே மேற்படி தடை கொண்டு வரப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment