(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சித் தலைவர்கள், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஆகியோர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது. முரண்பாடுகளுடன் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால் பெறுபேறு சாதகமாக அமையாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், காலவரயறையின்றிய வகையில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட யோசனை குறித்து அமைச்சரவை மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சித் தலைவர் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பித்த யோசனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.
மாகாண சபையில் எல்லை நிர்ணய விவகாரம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்துவது பயனற்றது.
எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை முன்வைத்து அமைச்சரவை கூட்டத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே கட்சி தலைவர் கூட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண யோசனை எட்டப்பட்டது.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஆளும் கட்சிக்கும் அதாவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஏனைய பங்காளி கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது அவசியமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கூட்டணியை பலப்படுத்த பங்காளி கட்சிகளுக்கும், பொதுஜன பெரனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.
மாகாண சபைத் தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதாக சுதந்திர கட்சி உறுப்பினர்களும், சுதந்திர கட்சி தனித்து சென்றால் தமக்கு பாதிப்பு இல்லை என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களும் போட்டித்தன்மையில் குறிப்பிட்டுக் கொள்வதை காண முடிகிறது.
அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்தே இடம்பெற்று முநந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றோம்.
கூட்டணியின் ஒன்றினைப்பின் காரணமாகவே நாட்டு மக்கள் முழுமையான ஆட்சியதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே மாகாண சபைத் தேர்தலிலும் ஒன்றினைந்து போட்டியிடாமல் கூட்டணிக்குள் முரண்பட்டுக் கொண்டால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment