'நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன். வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்' என கட்சித் தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'தமிழகத்தை மீண்டும் சுயமரியாதை கொண்ட மாநிலமாக, தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக, வேலைவாய்ப்பு பெருகும் மாநிலமாக, அனைத்து துறைகளிலும் இடம்பெறுகிற மாநிலமாக ஆக்கிட வேண்டும் என்ற எண்ணம் தமிழக வாக்காளர்களிடமுள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிக்கு பேராதரவு உள்ளது.
இந்த வெற்றிப் பயணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பொய்ப் பிரச்சாரங்களை அள்ளி வீசினார்கள். இவை எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. இறுதியாக வருமான வரி சோதனை எனும் பெயரில் மிரட்டல் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். மிரட்டலுக்கும், நெருக்கடிக்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க.
ஜனநாயகக் களத்தில் நேருக்குநேர் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வழி இல்லாதவர்கள், மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்பவர்கள், மிரட்டல் மூலம் கழகத்தை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர்.
ஆளும் தரப்பினரின் பொய்ப்பிரச்சாரம், வருமான வரி சோதனைகள், திசைதிருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறி விட வேண்டாம்.
நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன். மக்கள் தரப்போகும் வெற்றியை சிந்தாமல் சிதறாமல் நீங்கள் பெற்றுத் தாருங்கள்' என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று இரவு ஏழு மணியுடன் நிறைவடைகிறது. தமிழக தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கம் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment