சட்ட வைத்திய பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட யாழ். மாநகர மேயர் - தீவிர விசாரணையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் - சகோதரனை சந்திக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது! - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

சட்ட வைத்திய பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட யாழ். மாநகர மேயர் - தீவிர விசாரணையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் - சகோதரனை சந்திக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது!

யாழ். மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகர சபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது கணனி உட்பட சில பொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வருகை தந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment