எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம், கடந்த அரசாங்கம் பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது, முஸ்லிம் அமைப்பினால் வழங்கப்பட்ட நிதி மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதா ? - ஓமல்பே சோபித தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம், கடந்த அரசாங்கம் பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது, முஸ்லிம் அமைப்பினால் வழங்கப்பட்ட நிதி மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டதா ? - ஓமல்பே சோபித தேரர்

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எந்தவொரு அரசாங்கத்தினதும் பிரதான பொறுப்பாகும். எனினும் கடந்த அரசாங்கமும் அந்த பொறுப்பை நிறைவேற்றத்தவறியுள்ளதோடு, தற்போதைய அரசாங்கமும் இவ்விடயத்தில் உரிய அவதானம் செலுத்தவில்லை என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிரத்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் இணைந்து பயிற்சி பெற்ற பலர் இன்றும் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் ஏதேனுமொரு மத வழிபாட்டு ஸ்தலத்தில் இது போன்றதொரு தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டியதும் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சோகத்தை தெரிவிப்பதற்காக மாத்திரம் இந்த ஈராண்டு பூர்த்தி அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக மீண்டுமொரு இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதையும் இன்றைய தினத்தில் வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். எனினும் கடந்த அரசாங்கத்தினால் அந்த பொறுப்பு நிறைவேற்றப்படவில்லை. அதே போன்று தற்போதைய அரசாங்கத்தினாலும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பரவலாக குற்றஞ்சுமத்தப்படுகிறது.

எனவே கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதற்கமைய தீவிரவாதத்தை மாத்திரமின்றி அதற்கு ஏதுவாக அமைகின்ற காரணிகளும் இல்லாமலாக்கப்பட வேண்டும். 

அன்றைய தினம் தற்கொலை குண்டு தாக்குதல்களை முன்னெடுத்தவர்களுடன் தீரவிரவாத பயிற்சி பெற்ற பலர் இன்றும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள் தமது கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க ஆலயங்களில் மாத்திரமின்றி வேறு எந்தவொரு மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகும்.

தீவிரவாதத்தின் ஒரு ரூபத்தை மாத்திரமே நாம் 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பார்த்தோம். எனினும் அதன் ஏனைய ரூபங்களை அண்மையில் விஷத்தன்மை மிக்க உணவிலும், நேற்று (செவ்வாய்கிழமை) பாராளுமன்ற உரையொன்றிலும் அவதானிக்க முடிந்தது.

எஸ்.எல்.எஸ். தரச்சான்றின் மீதும் நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. மக்களை சீரழிக்கின்ற இது போன்ற அனைத்து விடயங்களும் தீவிரவாதமேயாகும். இவை அனைத்தையும் இல்லாதொழிக்கக் கூடிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். இதற்காக எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.

கடந்த காலங்களில் தலதா மாளிகை தாக்குதல், அரந்தலாவை பிக்குகள் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், தற்போது கத்தோலிக்க மக்கள் அனுபவிக்கின்ற வலியை எம்மாலும் உணர முடிகிறது.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் அதிலிருந்து மீள பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2019 ஜூலை 30 ஆம் திகதி சர்வதேச முஸ்லிம் அமைப்பினால் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டதா ?

இது தொடர்பில் சரியான தகவல்கள் இல்லை என்பதால் இன்றையதினம் புலனாய்வுப்பிரிவு மற்றும் அரசாங்கத்திடம் இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment