(இராஜதுரை ஹஷான்)
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல் நாடளாவிய ரீதியில் 200 பேருந்துகளும், 21 புகையிரதங்களும் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை போக்குவரத்து திணைக்களம் அறிவித்துளள்ளது.
புகையிரத சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிகமாக 21 புகையிரதங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளைக்கு ஒரு மேலதிக புகையிரதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சேவையில் ஈடுப்படும். யாழ்ப்பாணத்துக்கான விசேட புகையிரத சேவை 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
பதுளை, காலி, மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படும் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் நேரம் தொடர்பான தகவல்களை உரிய புகையிரத நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றுநிரூபத்திற்கு அமைய புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும்.
சகல மேலதிக புகையிரத சேவைகளிலும் புகையிரத திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படுவர் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
பேருந்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு 200 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மலையகத்திற்கும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , மற்றும் காலி உள்ளிட்ட தூர பிரதேசங்களுக்கும் இவ்வாறு மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இம் மேலதிக பேரூந்து சேவை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment