தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக மாகாண சபையை இரத்து செய்ய முடியாது : கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக மாகாண சபையை இரத்து செய்ய முடியாது : கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாண சபைகள் என்பது நாட்டில் அடிப்படை சட்டமாகும். எனவே தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அவற்றை இரத்து செய்ய முடியாது. அத்தோடு தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல் தீர்க்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறி செயற்பட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மாகாண சபைத் தேர்தல் கடந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது. இது தொடர்பான சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்களே இன்றும் தேர்தல் காலம் தாமதமடைவதற்கு காரணமாகும். 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி நாட்டின் அடிப்படை சட்டமாக மாகாண சபைகள் காணப்படுகின்றன. இவற்றை மீறி செயற்பட அரசாங்கம் விரும்பவில்லை. 

அத்தோடு மாகாண சபைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக இதனை மாற்றவோ இரத்து செய்யவோ முடியாது.

தேர்தல் முறைமைகள் தொடர்பில் சட்ட மூலத்தில் காணப்படுகின்ற சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment