(நா.தனுஜா)
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய நிதிப் பெறுகை ஒப்பந்தம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது.
சீனா 10 பில்லியன் யுவான் (1.54 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதியை இலங்கைக்கு கடனாக வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறது.
நாட்டில் நிலவும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு இது உதவியாக அமையும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான அண்மைய நிதிப் பெறுகை ஒப்பந்தம் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகள் தொடர்பில் கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரி கெரி ரைஸ் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் எம்மிடம் உடனடி நிதியுதவியைக் கோரியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார ரீதியான சவால்கள் மற்றும் உயர் கடன்சுமை ஆகியவற்றின் காரணமாக கடனுதவி வழங்குவது குறித்து ஆராய்வதற்கு ஏனைய நாடுகளை விடவும் உயர்வான காலம் தேவைப்படுவதாகவும் கெரி ரைஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment