பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களால், கொவிட் 19 காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலும் ஒரு வருட கால கல்வி பாதிப்பு ஏற்படும் எனவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக கட்டமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மாணவர்களின் நலன்கருதி கல்விசாரா ஊழியர் அனைவரையும் கடமைக்கு சமுகமளிக்குமாறு கேட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (14) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதனால், பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தற்போது இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சுமார் 3,500 மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
‘கொவிட்’ தொற்றால் 2022 இல் திட்டமிடப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற முடியாதிருந்தது. இதனால், 2023 ஆண்டில் தோற்றி பல்கலைக்ழகத்துக்கு தெரிவான இம்மாணவர்கள் முதலாவது ஆண்டில் கல்வி கற்பதாகவும், 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு இவ்வாண்டு (2024) நடத்தப்பட்டு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படுமென்றும் அவர் கூறினார்.
கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்கள், தமது கையேடுகளை தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment