ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் கொவிட் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மட்டும் இருந்துவிடாமல் நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தற்போது முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார் .
வென்னப்புவ பிரதேச சபை பிரிவுக்கு உட்பட்ட தங்கொட்டுவ, எட்டியாவெல - தும்மலகொட்டுவ கிராமிய வீதியை அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பின்னர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜுட் உடுகம்பொல, அமல் சுரங்க மற்றும் தீப்த நாமல் பெர்ணான்டோ ஆகியோர் உட்பட பிரதேசவாசிகளும் இதில் கலந்து கொண்டனர் .
மேற்படி வீதியை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 270 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் அருன்திக பெர்ணான்டோ அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் வழங்கும் திட்டமான ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டது. அதுமட்டுமல்லாமல் வேலையற்ற 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களையும் எமது அரசாங்கமே வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அவர்கள் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். எமது அரசாங்கம் பலம் மிக்கது. நாம் விமர்சனங்களுக்கு அச்சம் அடைவதில்லை. நாட்டில் ஐயாயிரம் இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ தேர்தல் தொகுதியில் மாத்திரம் ஏழு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நிதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக எமது அரசாங்கம் வழங்கியுள்ளது. சீரான பஸ் போக்குவரத்து சேவை வசதிகளையும் கிராமப்புற மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிராமப்புற அபிவிருத்திகளை மாத்திரமின்றி நகரப் பிரதேசங்களையும் நாம் அபிவிருத்தி செய்வோம். மக்களின் குரலுக்கு நாம் செவி சாய்ப்போம். தேர்தல் காலத்தில் எமது கட்சி வழங்கியுள்ள அபிவிருத்திக்கான வாக்குகளை நாம் நிறைவேற்றி வைப்போம். இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றார்.
நீர்கொழும்பு நிருபர்
No comments:
Post a Comment