யானைகளை மீண்டும் பிரதிவாதிகளுக்கு பொறுப்பளிக்கும் தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது - ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 23, 2021

யானைகளை மீண்டும் பிரதிவாதிகளுக்கு பொறுப்பளிக்கும் தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது - ஐக்கிய தேசியக் கட்சி

(செ.தேன்மொழி)

யானைகள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நபர்களை விடுவித்த பின்னர், அந்த யானைகளை மீண்டும் அவர்களுக்கே பொறுப்பளிப்பதற்கு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தொகுதி அமைப்பாளரும், சட்டதரணியுமான சுதத் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, நாட்டிலுள்ள யானைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டின் அரசாங்கம் எடுத்திருந்தது. இவ்வாறு யானைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் காட்டிலுள்ள தாய் யானைகளை கொலை செய்து, அவற்றின் குட்டிகளை சட்டவிரோதமாக எடுத்து வந்து சிலர் வளர்த்து வந்தனர்.

அந்த யானைகளுக்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக ஏற்கனவே உயிரிழந்த யானைகளுக்கு சொந்தமான ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கத்தில் யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது சட்டவிரோதமாக யானைகளை வைத்திருக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத யானைகள் தொடர்பில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்போது போலி ஆவணங்களை காண்பித்து வளர்க்கப்பட்டு வந்த ஆறு யானைகள் தொடர்பிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட யானைகளில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய மிருகக்காட்சி சாலையில் தலா 19 யானைகள் வீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் இவ்வாறு யானைகள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளை நிறுத்தி வைத்து விட்டு, பிரதிவாதிகளை விடுவித்து விடுதலை செய்வதுடன், அவர்களுக்கே அந்த யானைகளை பொறுப்பளிக்கவும் தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்திலே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

யானைகள் என்பது பொதுச் சொத்தாகும். அவை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும். இந்நிலையில் இந்த தீர்மானமானது சட்டத்திற்கு புறம்பானதாகும்.

No comments:

Post a Comment